Saturday 3 September 2016

ஐயோடா! என்னமாய் சிந்திக்கிறார்கள்!


ஐயோடா! சில மனிதர்களை நினைக்கும் போது நம்மை என்னமாய்  திணறடித்து விடுகிறார்கள்! எப்படி எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்!

ஒரு திருமண  நிகழ்ச்சி. வழக்கமான சம்பிராதயங்கள் ஆரம்பமாகின.  மாப்பிளை வீட்டார்  வந்தார்கள்; போனார்கள். பெண் வீட்டார் வந்தார்கள்; போனார்கள். எப்போ வச்சிக்கலாம், எப்படி வச்சிக்கலாம் என்று பேசி முடிவெடுத்தார்கள்.

இரண்டு குடும்பங்களுமே படித்தவர்கள். இரண்டு குடும்பங்களுமே ஒரேவித அந்தஸ்து உடையவை. ஒரே இனம். ஒரே மதம். பையனும், பெண்ணும் படித்தவர்கள்; நல்ல  வேலையில் உள்ளவர்கள். சீர், சினத்தியெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.

திருமண நாள் குறித்தாகிவிட்டது. விருந்துக்கான மண்டபம் பதிவு  செய்தாகிவிட்டது. திருமணப் பத்திரிக்கை அச்சாகிவிட்டது. பத்திரிக்கைகளை இப்போது கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அப்போது தீடீரென ஒரு நாள் மணப்பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளையை தனது வீட்டில் வந்து பார்க்கும்படி சொன்னார். குடும்பத்தோடு அல்ல, தனியாக. ஏன் தனியாக? மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் தயக்கம். இருந்தாலும் வருங்கால மாமனாராயிற்றே! தைரியத்தை வரவைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போனார்.

வீட்டிற்கு வந்ததும் மாமனார், மருமகனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அது ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தின் கடிதம். அக்கடிதத்தில் திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் போடப்பட்டிருந்தது! சுருக்கமாகச் சொன்னால்: திருமணம் ஆனதும் தனிவீடு பார்த்துப் போய்விட வேண்டும். ஒவ்வொரு மாதமும் இவர்கள் இருவரும் எடுக்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகயைப் பெண் வீட்டாருக்குக் கொடுத்துவிட வேண்டும். மாதத்தில் முதல் சனிக்கிழமையும், கடைசி சனிக்கிழமையும் பெண்  வீட்டிற்கு அவசியும் வர வேண்டும். இன்னும் பல!

மாப்பிள்ளை அந்தக் கடிதத்தைப் படித்ததும் "கிறு,கிறு" த்துப்  போய்விட்டார்! சொல்லாமல் கொள்ளமால் வீட்டைவிட்டு தனது வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்! என்ன ஆயிற்று? திருமணம் நின்று போனது.  இவ்வளவும் செய்தவர்  பெண்ணின் தகப்பனார்! அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் இது பற்றி ஒன்றும் தெரியவில்லை!  குடும்பமே வெலவெலத்துப் போனது.

கடைசியில் என்ன ஆயிற்றூ? அந்தத் தகப்பானாரை 'அம்போ' என்று தனியே விட்டுவிட்டு அந்தக் குடும்பம் தனது மகனோடு போய்ச் சேர்ந்து கொண்டது. தகப்பனார் என்ன ஆனார்? தனி ஆளாக இருந்து கொண்டு சௌக்கியமாக இருக்கிறார்1

கதையின் நீதி:  திருமணம் நடந்திருந்தால் மாமியாரே காய்களைச் சமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்!  ஒரு பெண் செய்ய வேண்டிய வேலையை ஆண் செய்தால் இப்படித்தான் நடக்கும்!

No comments:

Post a Comment